Sunday, March 11, 2007

கொலவெறி சிரிப்பு

நாம் எதிர்பார்த்த ஒன்று, எதிர்பாராத வகையில் வித்தியாசமாக நடந்துவிட்டால் (நம்மை பாதிக்காத வரையில்) விழைவது சிரிப்புதான்.



சர்ச்சிலை ஒரு உணவகத்தில் பார்த்த ஒரு பெண், மிகுந்த வெறுப்புடன் "நான் மட்டும் உன் மனைவியாக இருந்திருந்தால் உன் காஃபியில் விஷத்தைக் கலந்து கொடுத்திருப்பேன்" என்றாள்.
சர்ச்சில் சொன்னார், "அம்மணி, நிலைமை அப்படியானால் நான் அந்த காஃபியை மகிழ்ச்சியுடன் குடித்திருப்பேன்"


இதில் சர்ச்சிலிடம் நாம் எதிர்பார்த்தது கோபம். அது மாறி வரும்போது விழைவது கண்ணியமான நகைச்சுவை.




சிரிப்புக்களை பலவகைப் படுத்தியிருக்கிறர்கள். சில சிரிப்புகள் நம்மையே படுத்தி எடுத்துவிடும். அது வேற விஷயம்.

கடி ஜோக்ஸ், வாழ்வியல் சிரிப்புகள், போலி ஆன்மீகர்கள் சிரிப்பு, அரசியல் சிரிப்பு, சர்தார்ஜி சிரிப்புகள், இப்போது லல்லு சிரிப்புகள், லொள்ளு சிரிப்புகள்..... இது போல பல வகை உண்டு. இதெல்லாம் எதுக்கு... சிரிப்புன்னு சொல்லி எதை சொன்னாலும் சிரித்துவிட்டு போகவேண்டியதுதானே என்கிறீர்களா..... அதுவும் வாஸ்தவம்தான்.




இதெல்லாம் போக 'கொல வெறி சிரிப்பு' (sick jokes) என்றும் ஒரு வகை உண்டு. (sikh jokes இல்லை). இவை சாதாரண சிரிப்புடன் ஒரு வித பதைப்பையும் ஏற்படுத்துபவை. நம்ம ஊர்லே அவ்வளவாக இது கிடையாது என்று நினைக்கிறேன்.




"இன்னும் 5 ஆண்டுகளில் இந்தியாவில் வறுமையை ஒழித்துவிடுவோம்" என்று சுதந்திரம் பெற்றது முதல் நம்ம அரசியல்வாதிகள் சொல்லி வருவதும் இந்த வகையில் சேர்ந்ததுதான். என்னை இந்த வகை சிரிப்பில் இழுத்தது பழைய சிரிப்பு ஒன்று:


-- காட்டுமிராண்டியின் மகன் "அப்பா.. அம்மா உன்னை சாப்பிட கூப்பிடறா....."


இதுபோல சில கொலவெறி சிரிப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொல்லுகிறேன்.




--------------------

டொக்... டொக்...
"யாரது?"
"அம்மா.. உங்க வீட்டுக்காரர் மேலே ரோடுரோலர் எறிடுச்சி.... பாடியை கொண்டு வந்திருக்கோம்"
"நான் குளிச்சிட்டு இருக்கேன். அதை கதவுக்கு அடியில் தள்ளி விட்டுட்டு போங்க..."


---------------------


"சார்... உங்க மேலே காரை ஏத்தியவரை அடையாளம் காட்ட முடியுமா?"
"இல்லை.. ஆனா.. அந்த பொம்பளையின் அட்டகாசமான அந்த சிரிப்பை என்னால் அடையாளம் காண முடியும்..."


---------------------


"அம்மா... அம்மா... அண்ணன் மேலே தீ பிடிச்சி எரியுது.. "
"சரி.. நீ போயி உடனே ஹீட்டரை ஆஃப் பண்ணு. கரண்ட்டை வேஸ்ட் செய்யக்கூடாது."


-----------------------


"இருந்தாலும் அவனுக்கு பயங்கரமான மாறுகண்"
"எப்படி சொல்லுறே''
"பின்னே.. இந்த கண்ணுலே அழுத கண்ணீர்.. அந்த கன்னத்திலே வழியுது பார்"


----------------------


"ஐயோ.. என்னப்பா.. உன்னோட ஒரு கை மெஷின்லெ மாட்டி துண்டாயிடுச்சி... என்ன நடந்தது?"
"ஒண்ணுமில்லே.... நான் இப்படி கையை நீட்டிக்கிட்டே இப்படி திரும்புனேனா.... ஐயோ... இதோ அடுத்த கையும் போயிடிச்சி...."


---------------------




ஆப்பிரிக்க காட்டில் காட்டுவாசிகளிடம் மாட்டிக்கொண்டவனை பெரிய சட்டியில் போட்டு கீழே நெருப்பு வைத்துவிட்டார்கள். அப்போது அங்கே வந்த அவர்களது தலைவனை பார்த்ததும்தான் அவனுக்கு உயிர் வந்தது.
"டேய்.. நீயா.. என்னத்தெரியலியா... உன் கூட ஆக்ஸ்ஃபர்ட்லே படிச்சேனே.... நீ இன்னுமா நரமாமிசம் சாப்பிடறே... நாகரீகமாக மாறலியா?"
"நாங்கள்லாம் இப்போ ரொம்ப நாகரீகமாயிட்டோம்ல. இப்போ உன்னைக்கூட நாங்க ஸ்பூன், ஃபோர்க் வச்சிதான் சாப்பிடப்போறோம்.."


-----------------------


"மேடம்.. உங்க கணவருக்கு புற்றுநோய் இருப்பதை கண்டுபிடித்திருக்கிறேன். இன்னும் ஒரு மாதத்தில் இறந்து விடுவார்..."
"போங்க டாக்டர்... என்னை சந்தோஷப் படுத்த இப்படியெல்லாம் பொய் சொல்லாதீங்க..."


-----------------------





"நேற்றைக்கு பத்தாவது மாடியிலிருந்து நம்ம குமார் விழுந்துட்டான்"
"ஐயோ.. என்ன ஆச்சி.."
"நல்ல வேளையா நேரா கீழே ஒரு வைக்கோல் ஏத்துன வண்டி இருந்தது"
"அப்பாடா.."
"ஆனா.. அதிலே ஒரு கடப்பாரை நீட்டிட்டு இருந்தது"
"ஐயோ.. அப்புறம்?"
"நல்ல வேளையா அது கொஞ்சம் தள்ளிதான் இருந்தது"
"அப்பாடா.. "
"ஆனா... அவனுக்கு நேரா ஒரு பாம்பு இருந்தது"
"ஐயோ.. "
"நல்ல வேளையா அந்த பாம்பு செத்துப்போயிருந்தது"
"அப்பாடா.."
"ஆனா.... அந்த வண்டி நகர ஆரம்பிச்சிடிச்சி... ஏய்.. ஏன் ஓடறே...


-----------------------

Sunday, March 4, 2007

மாத்தி யோசி - 3



ஞாயிற்றுக் கிழமையும் காலையும் அதுவுமாக கந்தசாமி வேகமாக என் வீட்டைப் பார்த்து வருவது ஜன்னல் வழியே தெரிந்ததும் கலவரமாகி விட்டேன். இருந்தாலும் என்ன செய்ய. நாலாவது மாடியிலிருந்து குதிக்கவா முடியும். இதுதான் ambush warfare என்பதா?


"வாங்க.. வாங்க.. என்ன இவ்வளவு தூரம்.... சொல்லியிருந்தா நானே வந்திருப்பேனே?"

"சும்மா சொல்லாதிங்க தம்பி. வாங்கின 5000 ரூபாயை போன வாரமே கொண்டுவந்து தர்றதா சொன்னீங்க. இது வரை வரல்ல. அதான் உங்க வீட்டு காலண்டர் சரியாத்தான் இருக்காண்ணு பாத்துட்டுப் போகலாமுன்னு வந்தேன்.. ஹி.. ஹி.."

"சரீ.. சரீ.. உங்க நக்கல் புரியுது. என் நிலமை அப்படி. கோயிச்சுக்காதீங்க."

"சரி விடுங்க தம்பி. இன்னும் ரெண்டு நாளையிலே கொடுத்துடுங்க."



"தம்பி, அது என்ன பல வண்ணத்துலே சின்ன சின்ன கட்டைகளா இருக்கு. எடுங்க பாப்போம்."

"அது பையன் கொண்டாந்து வச்சிருக்கான். எதுக்குண்ணு தெரியலே. இதே வேலயாப் போச்சி. கிருக்குப்பய மவன்"

"உங்க பையனாச்சே.... அதுலே நாலு கட்டையை எடுங்க. ஒரு விளையாட்டு இருக்கு."

"சரி வாங்க. சும்மா சீரியலை பாத்து அழுதுட்டிருக்கிற கொடுமைக்கு.. உங்க கூட பேசிட்டு இருக்கலாம். என்னண்ணு சொல்லுங்க. கட்டையை எடுத்து ஒண்ணொண்ணா பக்கத்து வீட்டிக்காரர் சொட்டத்தலையிலே போடணுமா.."



கந்தசாமி சீரியசாகி விட்டார். "தம்பி, உங்க fantasyலே நான் தலையிட மாட்டேன். வாங்க... இந்த நாலு வண்ண கட்டைலே சிவப்பு, நீலம் இரண்டையும் ஒண்ணை ஒண்ணு தொடுர மாதிரி வைங்க பாக்கலாம்."



"இதோ வச்சிட்டேன். சரியா?"

"சூப்பர். இப்போ அந்த பச்சை நிற கட்டையை எடுத்து, சிவப்பு, நீலம் ரெண்டையும் தொடற மாதிரி வைங்க பாக்கலாம்.."

கொஞ்ச நேரம் யோசித்து பிறகு கண்டுபிடிதேன். "என்னுடைய மூளைக்கு தகுந்த மாதிரி சொல்லத் தெரியலியே உங்களுக்கு. இது சொத்தை மேட்டர்" என்று சொல்லிவிட்டு சரியாக வைத்து விட்டேன்.



"ரொம்ப சரி. இப்போ அடுத்த ஆரஞ்சு கட்டையை எடுத்து, முந்தைய மூணு கட்டையையும் தொடற மாதிரி வைங்க... முடியுமா..."

இப்போது சிக்கல்தான். எப்படி வைத்தாலும் ஏதாவது இரண்டு கட்டைகளைத்தான் தொடுகிறது. மூளையை போட்டு குழப்பிக்கொண்டிருந்தேன்.

"என்ன தம்பி... முடியலையா?"

இது என்னோட ஈகோவை தொட்டது. "இல்லெ.. இந்தமாதிரி புதிர்லாம் நான் ரொம்ப ஈசியா போட்டுருவேன். இன்னைக்கு கொஞ்சம் தலையை வலிக்கற மாதிரி இருக்கு. நாளைக்கு பாக்கலாமா?"

அப்போது விளையாடி விட்டு வந்த என் பையன் "என்ன அங்கிள்.. இது என்ன விளையாட்டு? நானும் வரலாமா?" என்றான்.

கந்தசாமி விளக்கினார். பையன் கட்டைகளையே பார்த்துக் கொண்டிருந்தவன், சடாரென்று ஆரஞ்சு கட்டையை எடுத்து மற்ற மூன்று கட்டைகளின் மேல் வைத்து "சரியா அங்கிள்?" என்றான். கந்தசாமி கைதட்டினார்.



"இது தப்பாட்டம். ஏமாத்தறீங்க. நான் ஒத்துக்கமாட்டேன். கட்டையை மேலே வைக்கலாம்னு சொல்லலியே.."

"மேலே வைக்கக்கூடாதுன்னு சொன்னேனா? நீங்களா ஏன் ஒரு கற்பனையான வரைமுறை வைச்சிக்கிட்டீங்க? இதனால உங்க மூளை குண்டுச் சட்டிக்குள்ளே குதிரை ஓட்டிக்கிட்டு இருக்கு.. இப்போ இன்னொரு விளையாட்டு... வர்ரீங்களா... இல்லேன்னா உங்க பையனோட விளையாடட்டுமா?"

மீண்டும் என் ஈகோவுக்கு சவாலா? "அவன் ஏதோ ஃப்ளூக்ல ஒரு தடவை சரியா சொல்லிட்டான். மத்தபடிக்கு அவன் என்னளவுக்கு வரமுடியாது. அவன் அவங்கம்மா மாதிரி.. சரி வாங்க விளையாடலாம்.."

கந்தசாமி ஒரு பேப்பரை எடுத்து புள்ளிகள் வைத்தார். "இப்போ இந்த ஒன்பது புள்ளிகளையும் கையை எடுக்காமல், நாலே நாலு நேர் கோடுகளால் இணைக்கணும். செய்யுங்க பாப்போம்.."



சரியாக என்னை என் பையன் முன்னாடி மாட்டிவிட்டுட்டார் கந்தசாமி. அவன் மூஞ்சியிலே ஒரு மாதிரியான சிரிப்பு வேறே. நம்மளை பெரிய லூசுன்னுல்ல நெனச்சிடுவான். இந்த சவால்ல ஜெயிச்சே காட்டிடணும்.

"கந்தசாமிண்ணே.. இப்போதான் ஞாபகம் வந்தது. கரண்டு பில் கட்டணும். இன்னைக்கு கடைசி நாள். இந்த விளையாட்டெ நாளைக்கு வச்சிக்கலாமா?"

"அப்பா.. நேத்திக்கே அம்மா கட்டியாச்சி... இந்த விளையாட்டுக்கு விடை சொல்லுங்க... ஓடாதிங்க..." என்றான் தவமிருந்து பெற்ற அருமை வாரிசு.

"எங்கே... நீங்க சொல்லுங்க பாப்போம்..." பதிலுக்கு சவால் விட்டேன்.

கந்தசாமி சிரித்துக் கொண்டே சுலபமாகக் கோடு போட்டுவிட்டார்.



"கோடு ஏன் வெளியிலே போகுது. தப்பு. தப்பு. இது சீட்டிங். நான் ஒத்துக்க மாட்டேன்.."

"கோடு வெளியே போகக்கூடாதுண்ணு ஒண்ணும் கண்டிசன் இல்லையே. நான் முன்னே சொன்ன மாதிரி, இல்லாத வரைமுறைகளை நீங்களாக கற்பனை செய்யக்கூடாது. அது உங்கள் யோசிக்கும் திறனை ஒரு குறுகிய கட்டத்துக்குள் அடக்கி விடும்."



"இப்போ எனக்கு ஒண்ணு ஞாபகத்துக்கு வருது. எங்க ஊர்ல ஒருத்தர் பந்தயம் வச்சாரு. தேங்காய மேலே தூக்கிப்போட்டு, அது கீழே வரும்போது குடுமியை சரியாக பிடிக்கணும்னு. பந்தயத்துலே ஒருவன் ஜெயிச்சுட்டான். எப்படி?... தூக்கிப்போட்ட தேங்காய் கீழே வரும்போது பக்கத்துலெ இருந்தவன் குடுமியை பிடிச்சுட்டான்.. யார் குடுமியைன்னு சொல்லலியே... அது போலத்தானா இதுவும்...?"

"ஒரு வகையிலே அப்படியும் வச்சுக்கலாம். சரி மிச்சத்தை நாளைக்கு வச்சிக்கலாம்"

நாளைக்குமா... நாளைக்கு வெளியூர் எங்கேயும் போகலாமா... இல்லைன்னா.. ஆஃபிசுக்குள்ளெயே தங்கிடலாமா என்று யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.



In dealing with situations or problems, many things have to be taken for granted. In order to live at all, one must be making assumptions, all the time. Yet each of these assumptions is a cliche pattern which may be restructured to make better use of available information. In addition, the restructuring of more complex patterns may prove impossible, unless one breaks through some assumed boundary.


------- Edward De Bono.